இந்திய திருச்சபை வரலாற்றில் தமிழகம் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பரிசுத்த தோமாவின் வருகையினால் இடம் பெற்றிருந்தாலும், 15ம் நூற்றாண்டு முதலே தூத்துக்குடி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. 1542ல் புனித பிரான்சிஸ் சேவியர் என்ற ரோமன்கத்தோலிக்க மிஷனெரி கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு ஊழியம் செய்து வந்ததோடு பல ஊழியர்களையும் அதன் சுற்றுப்புற கடற்கரை பகுதிகளுக்கு அனுப்பி ரோமன்கத்தோலிக்க சபைகளை நிறுவினார்.
பின்னர் 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் வியாபார நோக்கோடு தூத்துக்குடி வந்தனர். பல எதிர்ப்புகளுக்கிடையே இவர்கள் மீனவர்கள் மத்தியில் புராட்டஸ்டண்ட் சபைகளை நிறுவமுயன்று தோல்வியடைந்தனர். எனினும் 1750ல் தாங்கள் ஆராதிப்பதற்காக தற்போதுள்ள ஆங்கில ஆலயம் என்று அழைக்கப்படும் பரிசுத்த திரித்துவ ஆலயத்தை கட்டினர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் பங்கு பெற்றவர்களில் கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள், மிஷனெரி ரிங்கள் தோபே மற்றும் பேராயர். கால்டுவெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1789ம் ஆண்டு தூத்துக்குடியில் இருந்த டச்சு கவர்னரின் வேண்டுகோளை ஏற்று கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள் தரங்கம்பாடியிலிருந்து திரு.ராயப்பன், திரு.சத்தியநாதன் என்ற இரண்டு மிஷனெரிகளை இப்பகுதியில் ஊழியம் செய்ய அனுப்பினார். இவர்களின் ஊழியத்தினால் அதே ஆண்டில் 272 பேர் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையில் இணைந்தனர். வெகுகாலமாக இவர்களுக்கு இவ்வாலயத்திலேயே தமிழில் ஆராதனை நடத்தப்பட்டது. எனவே தூத்துக்குடியில் நமது சபை 1789ம் ஆண்டு நிறுவப்பட்டது எனலாம்.
தூய பேட்ரிக் ஆலய தோற்றம்
தங்களுக்கென தனியாக ஒரு ஆலயம் தேவைப்பட்டதால் 1839ல் தூத்துக்குடி வடக்கூர் பகுதியில் கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட அப்போதிருந்த கப்பல் குமாஸ்தா திரு.M. பாக்கியநாதன் பெருமுயற்சி செய்ததோடு தொடர்ந்து 25 ஆண்டுகளாக சபையின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்குவகித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் கனம். ரிச்சர்ட் போப் (Dr.G.U. போப்பின் சகோதரர்) அவர்கள் 1856ல் புதியம்புத்தூர், புதுக்கோட்டை வட்டாரங்களுக்கு மிஷனெரியாக பொறுப்பேற்றார். இருப்பினும் இவருக்குப் பின் வந்த மிஷனெரி கனம்.J.F.ஹேர்ன்ஸ் பேட்ரிக் சபையின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் இப்பகுதிவாழ் மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து சபை வளர்ச்சிக்கு வித்திட்டார் என்றால் மிகையாகாது. சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகமானதால் ஆலயத்தேவையை உணர்ந்து 1868ல் ஆலயக்கட்டுமானப் பணியை துவக்கினார். அதே வேளையில் தூத்துக்குடி சபைக்கென தனியாக ஒரு குருவானவர் நியமிக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்து 1869ல் முதல் குருவானவராக கனம். T.ஞானப்பிரகாசம் அபிஷேகம் செய்யப்பட்டார். இதே ஆண்டில் தூத்துக்குடி தனி சேகரமாக உருப்பெற்றது. இவர் இப்பகுதியில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். இவருக்குப்பின் கனம்.A. ஸ்வாமிநாதன் குருவானவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் 1872ல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, பேராயர் மகாகனம் பிரெடெரிக் ஜெல் அவர்களால் 19.01.1873ல் தூய பேட்ரிக் ஆலயம் என பெயரிடப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தனது நாட்டைச் சார்ந்த பேராயர் புனித பேட்ரிக்கின் ஞாபகமாக இப்பெயரை அவர் சூட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
திருச்சபை வளர்ச்சி
இவ்வாலயத்தில் 1877ல் பேராயர் கால்டுவெல் நன்றி ஆராதனையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1879 முதல் 1881 வரை கனம்.T. தேவசகாயம் இங்கு பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து பணியாற்றிய கனம்.T.சாமுவேல் (கனம்.T.ஞானப்பிரகாசத்தின் சகோதரர்) காலத்தில் புறமதத்தைச் சார்ந்த 158 பேர் புதிதாக ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட்டனர். 1885ல் சபை உறுப்பினர் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்தது. அதில் 816 பேர் புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இவ்வாலயமானது 1894ல் கனம். பாக்கியம் அவர்களால் விஸ்தரிக்கப்பட்டது. அதன் பின்னர் 1899 முதல் 1907 க்குள் இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. நாளுக்கு நாள் சபையானது வளர்ச்சியடைந்த காரணத்தினால் கனம். A.திரவியம் ஏசுதாசன் காலத்தில் ஆலய விஸ்தரிப்பு அவசியமாக கருதப்பட்டதால், 1965ல் தற்போதுள்ள ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. இவ்வாலயத்தினை பொறியாளர் திரு. J.J. கோயில்பிள்ளை வடிவமைத்தார். பேராயர் A.G.ஜெபராஜ் அவர்கள் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.
ஆலய கோபுரம்
தூய பேட்ரிக் ஆலய கோபுரத்திற்கென்று தனி வரலாறு இருந்த போதிலும், தற்போதுள்ள கோபுரமானது நகரிலேயே மிகவும் உயர்ந்ததாகக் காணப்படுகிறது. இந்நாளில் காணப்படும் இக்கோபுரமானது 1989ல் கனம். J.ஸ்டீபன் அவர்கள் காலத்தில் திட்டமிடப்பட்டு, 1999ல் கனம். J.ஜேசன் செல்வக்குமார் அவர்கள் காலத்தில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது. 2002ல் கனம். D.J.இர்வின் சார்லஸ் அவர்களின் பணிக்காலத்தில் பிரதம பேராயர் மகாகனம். K.J.சாமுவேல் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மிஷனெரிப் பணி
மிஷனெரிப் பணியில் தூய பேட்ரிக் திருச்சபை மிகவும் முக்கிய பங்குவகிக்கிறது என்றால் அது மிகையாகாது. மிஷனெரிப் பணிக்காக சபையின் மக்கள் மிகவும் உற்சாகத்தோடு கொடுத்துவருகின்றனர். இதுவரை சபையின் சார்பாக 21 ஆலயங்கள் IMS பணித்தளங்களில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மிஷனெரி ஸ்தாபனங்களைச் சேர்ந்த 39 மிஷனெரிகளை ஜெபத்தாலும், பொருளாலும் தாங்கிவருகின்றனர்.
கல்விப் பணி
இத்திருச்சபையின் ஆரம்பம் முதலே கல்விப்பணியும் இணைந்தே காணப்படுகிறது. மறைதிரு.ஜேம்ஸ் உறவ் என்ற Government Chaplain 1818ல் தூத்துக்குடியில் முதல் பள்ளியை நிறுவினார். தற்போது இவ்வாலயத்தின் சார்பில் 2 மேல்நிலைப் பள்ளிகளும், 2 நடுநிலைப் பள்ளிகளும், 2 ஆரம்பப் பள்ளிகளும் மற்றும் 1 ஆங்கிலப் பள்ளியும் நிறுவப்பட்டு கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
மருத்துவப்பணி
1991ம் ஆண்டு முதல் மருத்துவ தேவையை உணர்ந்து இச்சேவையானது ஆரம்பிக்கப்பட்டது. 1994ல் C.S.I. ஜெயராஜ் அன்னப்பாக்கியம் மிஷன் மருத்துவமனை கட்டப்பட்டு தொடர்ந்து மருத்துவ சேவை அளித்து வருகிறது.
சமூகப் பணி
தூய பேட்ரிக் போலியோ மற்றும் கருணை இல்லம் என்ற ஒரு அமைப்பினை 1991ல் நிறுவி அதன் மூலம் போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் பராமரிப்பு அளித்து வருகின்றனர். இதற்கான எல்லாச் செலவுகளையும் சபையின் மக்களே செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இல்லமானது தற்போது 82 குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இத்தனை தனிச்சிறப்பு வாய்ந்த இவ்வாலய வரலாற்றை அறிந்து கொண்ட நாம் இத்திருச்சபைக்காக ஜெபிப்போம், வளர்ச்சிக்காக உழைப்போம், ஆண்டவருக்கு மகிமை சேர்ப்போம்.
தொகுப்பு: Rev.P. ஜான்சன் டேனியல்
உதவி குருவானவர், வடக்கூர்